சிறந்த நகரங்களுக்கான 5 விருதுகளை தட்டிச் சென்றது குஜராத்
டெல்லி: நாட்டின் சிறந்த நகரங்களுக்கான 5 விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறது குஜராத் மாநிலம். இதில் வதோரா நகரம் முதலிடத்துக்கான விருதைப் பிடித்திருக்கிறது.
குஜராத் மாநிலம் தொழில்துறையில் முன்னேறிய மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது. மின் உற்பத்தியில் மிகைமின் மாநிலமாக திகழ்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விரிந்து கிடக்கும் தரிசு நிலம் தொழில்துறையினருக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
இயற்கை வளமிக்க அம்மாநிலம் விவசாயத்துறையிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நீர்நிலைகளைப் பரமாரிப்பதன் மூலம் விவசாயத்தை காப்பாற்றிக் கொண்டு வருகிறது குஜராத் மாநிலம்.
இந்தியா டுடே விருது
இந்நிலையில் இந்தியா டுடே சார்பில் சிறந்த நகரங்களுக்கான 2013ஆம் ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் குஜராத் மாநிலத்தின் 5 நகரங்கள் விருதை தட்டிச் சென்றுள்ளன. மொத்தம் நாட்டின் 50 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 17 நகரங்கள் இறுதிப்படுத்தப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வதோராவுக்கு முதலிடம்
குஜராத் மாநிலத்தின் வதோராவுக்கு சிறந்த நகரங்களில் முதலிடம் என்ற விருது கிடைத்திருக்கிறது. குற்றச் செயல்கள் எண்ணிக்கை, பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, மக்கள் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் வதோராவுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.
சூரத், காந்திநகர்
குஜராத்தின் காந்திநகர் மற்றும் சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களும் சிறந்த நகரங்களுக்கான விருதை வெவ்வேறு பிரிவுகளில் தட்டிச் சென்றிருக்கிறது.
5 விருதுகள்
இந்தியா டுடேயின் சிறந்த நகரங்களுக்கான விருதுகளாக மொத்தம் 5 ஐ குஜராத் மாநில அரசு பெற்றிருக்கிறது. இந்த விருதுகளை மத்திய அமைச்சர் கமல்நாத்திடம் இருந்து குஜராத் அரசு செயலர் பி. கெளதம் பெற்றுக் கொண்டார்.