திமுக எம்.பி. கனிமொழி, ராஜாத்தியம்மாள் மீது தொழில் அதிபர் மோசடி புகார்

சென்னை சாந்தோமில் உள்ள வெங்கடசாமி தெருவில் வசித்து வருபவர் முகைதீன் கபூர். பிரபல தொழில் அதிபர். அவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே நானும் சந்திரபோஸ் மற்றும் 4 பேர் இணைந்து அரவிந்தோ அக்ரோ ஏஜென்சி நிறுவனம் என்ற பெயரில், மின் உற்பத்தி நிலையம் நடத்தி வந்தோம். இந்த ஆலை தினந்தோறும் 8.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய திறன் கொண்டது.
இந்த ஆலை 110 ஏக்கரில் அமைந்துள்ளது. நிலம் மற்றும் எந்திரங்களின் மதிப்பு ரூ.48 கோடியாகும். இதில் எனக்கும் சந்திரபோசுக்கும் சுமார் 36 சதவீத பங்குகள் உள்ளது. கருவேல மரத்தை உடைத்து துண்டுகளாக்கி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. கருவேல மரங்களை வளர்ப்பதற்காக 1300 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
இந்த தொழிற்சாலைக்காக ரூ. 24 கோடி கடன் வாங்கப்பட்டது. பிறகு கூடுதலாக ரூ.4.54 கோடி கடன் வாங்கப்பட்டது. மொத்த கடன் ரூ.28.54 கோடியாகும்.
கொலாட்டரல் செக்யூரிட்டிக்காக எனது பெயரிலும் எனது சகோதரர் பெயரிலும், மனைவி பெயரிலும் தாம்பரம் பள்ளிக்கரணையில் உள்ள 20 கிரவுண்ட் நிலத்தை அடமானமாக காட்டியிருந்தேன். கச்சா பொருள் கிடைக்காததால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதம் தொழிற்சாலையை வாங்க கழிவு இரும்பு வியாபாரி ஏ.எம்.பரூக் என்பவர் முன் வந்தார். சரவணன் என்பர் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாளுக்கும், மகள் கனிமொழிக்கும் நெருக்கமானவர் என கூறி, அவரும், ஆடிட்டர் ரத்னமும் இந்த விவகாரத்தில் தலையிட்டனர்.
ஆடிட்டர் ரத்னம், வெஸ்ட் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனி பெயரில் வங்கியில் ரூ.10 கோடி வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளதற்கான ரசீதை காட்டினார். இந்த கம்பெனியோடு ராஜாத்தியம்மாளும், கனிமொழியும் தொடர்புடையவர்கள் ஆவர். ஜெய்கணேஷ் என்பவரையும் இதில் சரவணன் ஈடுபட வைத்தார்.
அரவிந்தோ அக்ரோவுக்கு சொந்தமான நிலத்தையும், எந்திரங்களையும் அபகரிக்க முயற்சி செய்தனர். எனது 17 சதவீத பங்குகளின் மதிப்பு ரூ.1.57 கோடி என்று பேசி முடித்தனர். ஆனால் ரூ.97 லட்சம் மட்டும் வங்கி வரைவோலையாக தந்தனர். எஞ்சிய ரூ.60 லட்சத்தை தரவே இல்லை.
பள்ளிக்கரணையில் உள்ள 20 கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு பல கோடியாகும். வங்கிக்கடனை கட்டாததால் இது ஏலத்திற்கு வந்துள்ளது. இதை அபகரிக்க சரவணன், ரத்னம் போன்றோர் முயன்று வருகின்றார்கள். எனவே, எனக்கு இந்த விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாங்கள் இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து முதல் கட்டமாக ரகசிய விசாரணை நடத்த காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications