கூடங்குளம் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
நெல்லை: பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுவதாக இருந்த கூடங்குளம் முற்றுகைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அணுஉலை, அணுமின் நிலையம் தொடர்பாக எந்தவித தகவல்களையும் தராமலும், பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடத்தப்படாமலும் மக்களைத் துச்சமாக நடத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கும், அணுசக்தித் துறைக்கும் எதிர்ப்பைத் தெரியப்படுத்தவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூடக் கோரியும் இம் மாதம் 27-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்திருந்தோம்.
ஆனால், அதே நாளில் கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் முற்றுகைப் போராட்டத்தைத் தள்ளிவைத்திருக்கிறோம்.
அடுத்த போராட்டம் குறித்து முடிவு செய்ய இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அனைத்துச் சமுதாயக் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications