ராஜ்யசபாவில் அதிமுக, திமுக, கம்யூ. பாஜக எம்.பிக்களிடம் வாங்கிக் கட்டிக் கட்டிய ஞானதேசிகன்

ராஜ்யசபாவில் இன்று இலங்கை போர்க் குற்றம் தொடர்பான சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய ஞானதேசிகன் எம்.பி தமது உரையின் தொடக்கத்திலேயே சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இலங்கைத் தமிழர் பிரச்சனையை உணர்ச்சிப்பூர்வமாக பார்க்கக் கூடாது... என்று கூறினார். ஞானதேசிகனுக்கு முன்பு பேசிய திமுகவின் திருச்சி சிவா, இந்த எங்களது உணர்வுப்பூர்வமான பிரச்சனை என்று பதிவு செய்திருந்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய ஞானதேசிகன், இலங்கை போர்க் குற்றம் செய்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்து பலியானோர் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டினர் புலிகள் என்று ஐ.நா. அறிக்கை சொல்லுகிறது என்றார்.
அவ்வளவுதான்! திமுகவின் சிவா, கனிமொழி, அதிமுகவின் மைத்ரேயன், செல்வகணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா என ஒவ்வொருவரும் எழுந்து ஞானதேசிகனை வறுக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பாரதிய ஜனதாவின் வெங்கையா நாயுடுவும் ஞானதேசிகனுக்கு எதிராக இணைந்து கொள்ள தன்னந்தனியாக ஞானதேசிகன் தவித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் தமிழக மீனவர்கள் பிரச்சனையெல்லாம் தொட்டு அப்படியே ஒருவழியாக இலங்கை போர்க் குற்றம் பற்றி பேசி அமர்ந்துவிட்டார்.
இதில் வேடிக்கை என்னவெனில் இந்த 'பஞ்சாயத்து' நடைபெற்ற போது அவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து இருந்தது தமிழக காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications