ஹைதரபாத்தை தொடர்ந்து மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறி… கோவில்களில் பலத்த பாதுகாப்பு
மதுரை: மதுரையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முக்கிய ரயில்நிலையங்கள், கோவில்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பிஜேபி தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் வரும்போதெல்லாம் வெடிகுண்டுகள் கைப்பற்றப்படுவதனால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சியம்மன் கோவில், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் வைத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலை அடுத்து புதன்கிழமை அதிகாலை முதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கோயிலின் 4 பக்கங்களையும் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஸ்ரீஆண்டாள் கோயில் கோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளது. நாள்தோறும் நாடடின் பல பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து இந்த கோயில் முழுவதும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய், மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு தீவிர சோதனை செய்யப்பட்டது. பின்னர் ஆயுதப்படை போலீஸார் கோயில் பாதுகாப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
கோயிலினுள் கடைகள் வைத்திருப்பவர்கள், பொது மக்கள், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இப் பகுதியைக் கடந்து பள்ளி செல்லும் மாணவ மாணவியர் வேறு பாதை வழியே செல்ல அறிவுரைப்படுத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications