தேமுதிகவில் 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்' லெவலுக்கு அடிப்பதில் பெஸ்ட் யார்...?
சென்னை: தேமுதிக என்றாலே யாராவது, யாரையாவது அடித்துக் கொண்டிருப்பார்கள் என்று கிண்டலடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதை ஏற்படுத்தி வைத்தவர் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தான்.
கோபம் வந்து விட்டால் போதும், எங்கு இருக்கிறோம், என்ன செய்கிறோம் என்று கூட யோசிக்காமல் கையைத் தூக்கி விடுகிறார். ஒன்று அடிக்கிறார், இல்லையென்றால் நாக்கை மடிக்கிறார்.
இவரிடம் அடிபட்டவர்கள் லிஸ்ட் சற்றே பெரியது.. இப்போது தலைவர் பழியில் தொண்டர்களும் கிளம்பி விட்டனர். அவர்களும் கையை ஆயுதமாக பயன்படுத்தி அடித்து வெளுக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் அத்தனை பேரும் அதிர்ச்சி அடையும் விதமாக கட்சித் தலைவர் விஜயகாந்த் தலை மீதே கையை வைத்து விட்டார் கட்சி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி. அதுதான் தேமுதிகவினரை அதிர வைத்துள்ளது.
தேமுதிகவில் யார் யாரை அடித்தார்கள், எப்படி அடித்தார்கள், எதற்காக அடித்தார்கள்... இதுகுறித்த ஒரு ரவுண்டப்.
ஷூட்டிங்கில் விஜயகாந்த் விட்ட பளார் பளார்
தர்மபுரி படத்தின் ஷூட்டிங் திருச்சியில் நடந்தது. அப்போது விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஆரம்பிக்கப் போவதாக பரபரப்பு நிலவிய நேரம் அது. அந்த சமயத்தில் தன்னைக் காண திரண்டு வந்திருந்த ரசிகர்களால் கடுப்பாகிப் போனார் விஜயகாந்த். அதிலும் ஒருவர் அவரிடம் மிகவும் நெருங்கி வந்ததால் கோபமாகி பளார் பளார் என நடந்து கொண்டே அவரை சரமாரியாக அடித்தார். இதுதான் பப்ளிக் பிளேஸில் விஜயகாந்த் அடித்த முதல் அடி.
தர்மபுரி வேட்பாளருக்கு வேனுக்குள் கும்மி...
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரின் பெயரை தவறாக சொல்லி விட்டார். இதை அந்த வேட்பாளர் விஜயகாந்த்திடம் எடுத்துக் கூறினார். அது மைக்கில் ஒலித்து விட்டதால் கடுப்பாகிப் போன விஜயகாநத் ஆயிரக்கணக்கானோர் பார்க்க, வேனுக்குள் வைத்தே கும கும்மென்று அடித்துக் கும்மி விட்டார்.
சட்டசபைக்குள் சக எம்.எல்.ஏக்களை தாக்கிய தேமுதிகவினர்
சட்டசபைக்குள் சமீபத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தமிழழகனும், மைக்கேல் ராயப்பனும் முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதால் கோபமடைந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் மைக்கேல் ராயப்பனை சரமாரியாக அடித்து வெளுத்தனர். அந்த தாக்குதலில் முன்னணியில் இருந்தவர் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதிதான்.
செய்தியாளரைத் திட்டிய விஜயகாந்த்-அடித்த எம்.எல்.ஏ
அதேபோல சென்னை விமான நிலையத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட மூத்த பத்திரிக்கையாளர் பாலுவை நாயே நாயே என்று விஜயகாந்த் திட்ட, தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏ. அனகை முருகேசன் அடித்துக் கீழே தள்ளி விட்டார்.
தலைவர் மீதே கை வைத்த பார்த்தசாரதி
இப்படி எல்லோரையும், அடிப்பதும் திட்டுவதுமாக உள்ள தனது தலைவர் விஜயகாந்த் மீதே கை வைத்து விட்டார் விருகம்பாக்கம் பார்த்தசாரதி.
தலைவரை தொண்டர் அடிப்பது இதுவே முதல் முறை
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியக் கட்சியின் தலைவரை, அதுவும் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவரை அவரது கட்சி எம்.எல்.ஏவே. அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
பரவாயில்லை, அடியின் வலி எப்படி இருக்கும் என்பதை விஜயகாந்த் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம். இனி யாருக்கும் தேமுதிகவில் அடி விழாது என்றும் நம்புவோம்.