பட்ஜெட்டுக்கு நிதிஷ்குமார் பாராட்டு- அணி மாறுவாரோ பீதியில் பாஜக!

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கிறது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். ஆனால் பாரதிய ஜனதா கட்சி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க மும்முரம் காட்டுவதை நீண்டகாலமாகவே நிதிஷ்குமார் எதிர்த்து வருகிறது. தற்போதைய சூழலில் பாஜகவினர் மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டைப் பாராட்டியிருக்கிறார் நிதிஷ்குமார். குறிப்பாக தமது மாநிலம் நீண்ட்காலமாக கோரி வந்ததை ஏற்று கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்கிறார். ஆனால் அவரது கட்சி இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் உள்ள பாஜகவோ பட்ஜெட்டை விமர்சித்திருக்கிறது.
நிதிஷ்குமாரின் இந்த பாராட்டால் பாஜக சற்றே கலங்கிப் போயிருக்கிறது. அனேகமாக லோக்சபா தேர்தலில் மோடியை பாஜக முன்னிறுத்தினால் நிச்சயமாக நிதிஷ்குமார் அணி மாறுவார் என்றே கூறப்படுகிறது. இதற்கான சிக்னலாகவே இந்தப் பாராட்டை அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். காங்கிரஸும் நிதிஷ்குமாரை இழுக்கவே பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவோ, அப்படியெல்லாம் காங்கிரஸ் அணிக்கு நிதிஷ்குமார் போய்விடமாட்டார் என்றே நம்புகிறோம் என்று கூறியிருக்கிறார்.
இருப்பினும் நிதிஷ்குமாரின் இந்த பாராட்டு பாஜகவின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications