கார் ஓட்டியபோது மாரடைப்பு.. பொறுப்புடன் பயணிகளைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த டிரைவர்
திருப்பதி: திருப்பதியைச் சேர்ந்த ஒரு டாக்சி டிரைவர் கார் ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு துடித்தார். அந்த நிலையிலும் கூட காரை பொறுப்பாக நிறுத்தி பயணிகளைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்தார்.
திருப்பதியைச் சேர்ந்தவர் மஸ்தான் பாஷா. 40 வயதான இவர் கார் டிரைவராக உள்ளார். இவர் கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்களை காரில் ஏற்றிச் செல்லும் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களை தனது காரில் திருமலைக்கு அழைத்து சென்றார். இரண்டு வளைவுகளை தாண்டினால் கோவிலை சென்றடைய முடியும் என்ற நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தபடியே காரை ஓட்டினார்.
செய்கையால் நெஞ்சு வலிப்பதை காரில் வந்த பக்தர்களிடம் தெரிவித்த அவர் காரின் வேகத்தை குறைத்து மெதுவாக ஒரு தடுப்பு சுவரில் மோதி நிறுத்தினார். காரில் இருந்த பக்தர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சு வருவதற்குள் மஸ்தான் பாஷா பரிதாபமாக இறந்தார்.
மஸ்தான் பாஷாவின் பொறுப்பும், மரணத்தின் தருவாயிலும் அவர் காட்டிய விவேகமும் அனைவரையும் உருக வைத்து விட்டது.












Click it and Unblock the Notifications