அண்டை மாநிலங்கள் மீது வழக்குத் தொடருவதுதான் அரசின் வேலையா?: கேட்கிறார் விஜயகாந்த்
திண்டுக்கல்: அண்டை மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரத்தான் மக்கள் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக அரசைப் பற்றி அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த் மீது, திண்டுக்கல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எஸ். ஜெயபாலன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி பாலசுந்தரகுமார் முன்னிலையில், விஜயகாந்த் நேற்று நேரில் ஆஜரானார். இந்த வழக்கு மார்ச் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசு நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதை கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. என்மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், அதனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஒரு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு அல்ல. பிரச்சனைகளுக்கு சுமூகப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications