7 அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் 7 அதிகாரிகளின் ஐ.ஏ.எஸ். பதவி உயர்வை ரத்து செய்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விரைவில் புதிய குழு அமைத்து தகுதியானவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் மோகன கிருஷ்ணன் என்பவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற என்னை பரிசீலிக்கக் கோருவதற்கு உரிமை உள்ளது. 2009ம் ஆண்டுக்கு காலியாக உள்ள ஏழு ஐ.ஏ.எஸ்.பணியிடங்களுக்கு 10 பேர் அடங்கிய பட்டியலை மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு அனுப்பியது.
ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்ட நந்தகோபால் என்பவரை தேர்வாணையம் தேர்ந்தெடுத்துள்ளது. எனக்கு தகுதி இருந்தும் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே, ஐ.ஏ.எஸ். பதவி உயர்வுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தீர்ப்பாய உறுப்பினர்கள் வெங்கடேஸ்வர ராவ், சதபதி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது,
நேர்மையான குற்றம் காண முடியாத திறமை வாய்ந்த அதிகாரிகளை தான் தேர்ந்தெடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். அவ்வாறு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவோர் நல்ல பண்புகள் கொண்டவராக, நேர்மையானவராக இருக்க வேண்டும்.
அதிகாரி நந்தகோபால் தொடர்பான ஆவணங்களைப் பார்க்கும் போது அவருக்கு எதிராக மாநில அரசு குற்றச்சாட்டுக்களை முனைந்துள்ளது; ஆனால், அந்த குற்றச்சாட்டுக்களை கைவிடுவதற்கு, செல்லுபடியான காரணங்களை அளிக்க தவறிவிட்டது.
குற்றச்சாட்டுக்களை கைவிட்டு நேர்மை சான்றிதழ் அளித்த மாநில அரசின் நடவடிக்கையைப் பார்க்கும் போது, அவசரகதியில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதிகாரிகளின் பெயர்களை பரிசீலிப்பதற்காக கூடிய தேர்வுக் குழுவானது, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து முடிவெடுக்கவில்லை.
எனவே, 2009ம் ஆண்டுக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்ய, தேர்வுக் குழுவை மீண்டும் கூட்டுவதற்கு மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. மனுதாரரின் பெயரையும், பரிசீலிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications