மார்ச் 7க்குப் பதில் 9ம் தேதி ஜெயலலிதாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாதவுக்கு காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் சார்பில் மார்ச் 7ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பாராட்டு விழா தற்போது மார்ச் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிதழில் காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை வெளியிடச் செய்து, தமிழகத்துக்கான காவிரி நீரை உச்சநீதிமன்றம் மூலம் பெற்று தந்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவை கடந்த மாதம் 27-ந் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு காவிரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் இதற்கான விழாவை நடத்த ஜெயலலிதா ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் வரும் 7-ந் தேதி தஞ்சையில் இந்த விழாவை நடத்த அனுமதி அளித்தார்.
இந்த பாராட்டு விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7-ந் தேதி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சைக்கு வருவதாக இருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் தஞ்சை வருகை 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி பாசன விளை பொருட்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் கூறுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்டதும், அவர் தஞ்சையில் 7-ந் தேதி விழாவை நடத்த அனுமதி அளித்தார். ஆனால், விழா ஏற்பாடுகளை கவனிக்கப் போதுமான கால அவகாசம் இல்லாததால் 2 நாட்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வடம் கேட்டுக் கொண்டேன். அதை அவர் பெரும் மனத்துடன் ஒப்புக் கொண்டு வருகிற 9-ந் தேதி சனிக்கிழமை தஞ்சையில் பாராட்டு விழா நடத்த அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, இந்தப் பாராட்டு விழா வருகிற 9-ந் தேதி மதியம் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் சிறப்பாக நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும், காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வலியுறுத்த வேண்டி 1991-ல் முதல்வராக இருந்த அம்மாவை எங்கள் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டோம். உடனே, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்தில் எங்கள் சங்கம் உட்பட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர். பின்னர் நாங்கள் அனைவரும் அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவை 1991-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி டெல்லியில் சந்தித்தோம். பிரதமரை சந்தித்து ஒரு வாரத்திற்குள், அதாவது டிசம்பர் 10-ந் தேதி இடைக்கால தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட்டனர். அந்த இடைக்கால தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட அப்போதும் துணை நின்றவர் முதல்வர் ஜெயலலிதா ஆவார்.
தற்போது காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு 6 வருடங்கள் ஆகியும் யாரும் கவனிக்கவும் இல்லை, கவலைப்படவும் இல்லை. முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 2011-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி திருச்சியில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டினோம். ஜூலை மாதமே முதல்வர் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் சட்டரீதியான வெற்றியும் பெற்றுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்வர் ஜெயலலிதாவை தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் நன்றி கூறி பாராட்டும் வகையில், வரும் 9-ந் தேதி விவசாயிகள் சார்பில் தஞ்சையில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவில் அனைத்து விவசாய பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications