மரண தண்டனைக் கைதிகள் அழைத்துச் செல்லப்படுவதை 'லைவாக' ஒளிபரப்பிய சீன டிவி!

சீனாவின் யுனானன் சிறையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மியான்மரைச் சேர்ந்த நாவ் காம் உளிட்ட நான்கு கைதிகளை மரண தண்டனைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது அதை நேரடியாக காட்டியது சீன டிவி. இருப்பினும் கைதிகளை தூக்கிலிடுவதை அது காட்டவில்லை.
இந்த நான்கு கைதிகளும், கடந்த 2011ம் ஆண்டு மேகாங் ஆற்றில் 13 சீன மீனவர்களைக் கொலை செய்ததாக கைதான வெளிநாட்டுக்காரர்கள் ஆவர். இந்த நால்வருக்கும் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதற்கு முன்பாக நால்வரும் அவர்களது சிறை அறையிலிருந்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதை நேரடியாக ஒளிபரப்பியது சீன அரசு டிவி.
இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இது அறிவுப்பூர்வமான செயல் அல்ல என்று பலர் டிவிட்டர், பேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு மரண தண்டனைக் கைதிகளை டிவியில் காட்டுவது வழக்கமாக இருந்தது. பின்னர் இது நீக்கப்பட்டது.
நடந்தது என்ன...?
மெகாங் ஆறு, திபெத்தில் உருவாகி சீனாவின் யுனான் மாகாணம் வழியாக ஓடி, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் நாடுகளை கடந்து செல்கிறது. உலகின் 12-வது மிக நீளமான ஆறாக கருதப்படும் இந்த ஆற்றை பயன்படுத்தி, போதைபொருள் கடத்தலுக்கு பெயர்போன தங்க முக்கோணம் பகுதியில் கடத்தல் நடந்து வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு இந்த ஆற்றில் கடத்தல்காரர்கள் சென்று கொண்டிருந்தபோது, அதே பாதையில் சென்ற சீன பொதுமக்கள் மீது கடத்தல்காரர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீன அரசு, வெளிநாட்டு கடத்தல்காரர்கள் சிலரை குற்றவாளிகள் என அடையாளம் காட்டியது.
முக்கிய குற்றவாளி மியான்மரை சேர்ந்த நாவ் காம் ஆவார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்துடன், வேறு சிலரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நான்கு பேருக்குத்தான் தற்போது மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications