இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்- ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நாளை தாக்கல்

இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நாட்டின் சேனல்-4 தொலைக்காட்சி கூடுதலாகவும் ஆவணப்படங்களை வெளியிட்டு வருகிறது. இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சி உலகை உலுக்கி வருகிறது.
இந்த நிலையில், 47 நாடுகளை உறுப்பினர்களாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. இதில் போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. நாளை இந்த தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்கிறது. தீர்மான விவரம் வெளியாகவில்லை என்ற போதிலும், இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அதில் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறிவித்து உள்ளன.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும், சர்வதேச தமிழ் அமைப்புகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தமது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் உறுப்பினர்களின் விவாதத்துக்கு பின் தீர்மானத்தை கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் ஓட்டெடுப்பின்றி ஒரு மனதாக நிறைவேற்ற அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications