நடத்தையில் சந்தேகம்: மாமல்லபுரத்தில் காதல் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை
காஞ்சீபுரம்: மாமல்லபுரத்தில் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அவரையும், 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கோவளம் சாலையை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(34). வெல்டிங் வேலை பார்ப்பவர். அவர் அண்ணாநகரைச் சேர்ந்த சாரங்கன் என்பவரின் மகள் ரமணியை(30) காதலித்து கடந்த 2008ம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு மைத்ரேயன் (4) என்ற மகனும், சவுஜன்யா (2) என்ற மகளும் உள்ளனர்.
மாமல்லபுரம் மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார் ரமணி. அவருடைய மகன் மைத்ரேயன் அதே பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லுமாறு ரமணி கண்டித்துள்ளார்.
இது தவிர ரமணி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் அவர் நடத்தையில் சந்தேகப்பட்டு மணிகண்டன் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் ரமணி பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தார். மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் வழக்கம்போல் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் படுக்கை அறையில் வைத்து தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்றார். அதன் பிறகு மகனின் கழுத்தையும் அறுத்துக் கொலை செய்தார்.
பின்னர் மகளின் கழுத்தை கையால் நெறித்துக் கொன்றார். மனைவி, குழந்தைகள் இறந்தவுடன் அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை 6 மணிக்கு ரமணியின் தம்பி கோபி அங்கு வந்துள்ளார். அப்போது வீடு உள்புறமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியாக அவர் எட்டிப் பார்த்தார். அப்போது தனது அக்காவின் குடும்பமே பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications