பாகிஸ்தானில் கார் குண்டு வெடித்து பெண்கள், குழந்தைகள் உள்பட 48 பேர் பலி
கராச்சி: பாகிஸ்தானின் வர்த்தக நகரமாகன கராச்சியில் இரண்டு இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடித்து 48 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாக ஷியா பிரிவினர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் கராச்சி நகரில் உள்ள அப்பாஸ் டவுன் பகுதியில் ஷியா பிரிவினர் தொழுகை நடத்திய மசூதி அருகே குண்டு வெடிப்பு நடைபெற்றது. கார் ஒன்றில் இந்த குண்டு வைக்கப் பட்டு வெடிக்க வைக்கப் பட்டதாக தெரிகிறது. சுமார் 150 கிலோ வெடி மருந்துகள் மற்றும் ‘பால் பேரிங்' கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த குண்டு வெடித்த ஓசை 10 கி.மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது.
இந்த பயங்கர குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்பட 48 பேர் உடல் சிதறி பலியாகினர். 140க்கும் மேற்பட்ட படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் கராச்சி நகரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஷியா பிரிவினர் மீது தாக்குதல்
பாகிஸ்தான் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஷியா பிரிவினர் மீது அவ்வப்போது போராளிகள் நடத்திய தாக்குதல் சம்பவங்களில் கடந்த (2012) ஆண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த மாதம், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் ஷியா பிரிவினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் தாக்குதலில் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தாக்குதல்களை முறியடித்து ஷியா மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த வாரம் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தேடுதல் வேட்டை மற்றும் தாக்குதலில் பல்வேறு போராளி முகாம்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications