ரூ.818 கோடி நிதி மோசடி: கோவை பைன் பியூச்சர் இயக்குனர்கள் கைது
கோவை: 818 கோடி ரூபாய் மோசடி செய்த பைன் பியூச்சர் நிதி நிறுவன அதிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பைன் பியூச்சர் நிதிநிறுவனம் கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக இயக்குனர்களாக செயல்பட்டு வந்த விவேக், செந்தில்குமார் ஆகியோர், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குவதாகவும், ஆண்டு இறுதியில் முதலீட்டு தொகையை திரும்ப வழங்குவதாகவும் கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டனர்.
இதை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். கோவை, திருப்பூர், அன்னூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பைன் பியூச்சர் நிறுவனத்தில் 818 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
பலநூறு கோடி ரூபாய் பணம் சேர்ந்த உடன் நிறுவனத்தை மூடிவிட்டு பைன்பியூச்சர் நிறுவன இயக்குனர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து முதலீட்டாளர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவுபோலீசில் புகார் செய்தனர்
கோவை மாட்ட குற்றப்பிரிவில் இருந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து தலைமறைவானவர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது.
பைன் பியூச்சர் இயக்குனர்கள் செந்தில்குமார் , விவேக் ஆகியோர் சென்னையில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் பதுங்கியிருந்த அறையில் சோதனை செய்தபோது ரூ.4 கோடி ரொக்க பணம், 1 1/2 கிலோ தங்கம் ஆகியவை சிக்கியது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு விசாரணை நடைபெறும். இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் பணம் குறித்த தகவல்கள் விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications