பிரதமர் பதவி... சோனியா பாணியில் ராகுல்? அப்ப அடுத்த மன்மோகன்சிங் நம்ம ப.சி?
டெல்லி: தமக்கு பிரதமர் பதவி மீது விருப்பம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் 'நம்பிக்கை தூண்' ராகுல் காந்தி அறிவித்துவிட்டார். இதனால் சோனியா காந்தி பாணியில் 'நிழல்' அரசையே அவர் நடத்த விரும்புவதாக கூறப்படுகிறது.
ராகுல்காந்தியின் குடும்பத்தில் ஜஹவர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என பிரதமர் பதவியில் அமர்ந்ததை சோனியா முடிவுக்கு கொண்டுவந்தார். சோனியா காந்தி நேரடியாக பிரதமர் பதவியில் அமராமல் இரு முறையும் மன்மோகன்சிங்கையே பிரதமராக "நியமித்தார்".
காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியைக் கைப்பற்றும் போதெல்லாம் சோனியா குடும்பத்து நபர் ஒருவரையே பிரதமராக பார்ப்பது இந்த நாட்டின் வழக்கமாகிவிட்டது. காங்கிரஸின் அழிக்க முடியாத கலாச்சாரமாகவும் மாறிவிட்டது. இப்படித்தான் ராகுல் காந்தியை நாட்டின் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்துகிறது.
ஆனால் ராகுல் காந்தியோ தமக்கு பிரதமர் பதவி மற்றும் திருமணத்தை விட காங்கிரஸின் வளர்ச்சிதான் முக்கியம் என்று அறிவித்திருக்கிறார். ராகுலின் இந்த அறிவிப்பானது அவரது அம்மா 'சோனியா' வழியை ராகுல் கடைபிடிக்கக் கூடும் என்பதையே வெளிப்படுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அப்படியானால் சோனியாவுக்காக பிரதமர் பதவியில் மன்மோகன்சிங் அமர்ந்ததைப் போல காங்கிரஸ் கட்சியில் ராகுலுக்காக 'பிரதமர்' பதவியில் யார் அமர்த்தப்படுவார்கள் என்ற விவாதமும் அக்கட்சியில் களைகட்டத் தொடங்கி இருக்கிறது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நம்ம ஊர் ப. சிதம்பரம். இவருக்கு அடுத்து ஏ.கே. அந்தோணி, ஷீலா தீட்சித், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரது பெயர்களும் அடிபடுகிறது. ஏற்கெனவே ப.சிதம்பரத்தை பிரதமர் பதவியில் அமர வைக்க பன்னாட்டு நிறுவனங்கள் லாபியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications