கூடங்குளம்.. 30 நாளில் மின் உற்பத்தி தொடங்குமாம் - கெடுவை மாற்றிய நாராயணசாமி!!

பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள், எதிர்ப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில், இன்னும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
கடந்த ஓராண்டு காலமாக, இந்த நிலையில் அடுத்த 15 நாட்களில் மின்சார உற்பத்தி ஆரம்பமாகும் என்று கூறி வருகிறார் அமைச்சர் நாராயணசாமி. கிட்டத்தட்ட அவர் பெயரே '15 நாள் நாராயணசாமி' என்று கிண்டலடிக்கும் அளவுக்குப் போய்விட்டது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்குவது எப்போது? தமிழகத்துக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும்? அணுமின் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் செய்யப்பட்டு உள்ளன? போன்ற கேள்விகளை எம்.பி.க்கள் கேட்டிருந்தனர். அவற்றுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வி.நாராயணசாமி நேற்று எழுத்து மூலமாக பதில் அளித்தார்.
இந்த முறை ஒரு மாறுதலாக 15 நாட்கள் கெடுவை 30 நாட்களுக்கு மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது ஏப்ரலில் உற்பத்தி தொடங்குமாம்.
அவர் கூறிய பதில்:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 1-வது மற்றும் 2-வது அணு உலைகளில் மின்சார உற்பத்தி தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதன்படி முதலாவது அணு உலையில் அடுத்த (ஏப்ரல்) மாதமும், 2- வது அணு உலையில் அக்டோபர் மாதமும் மின்சார உற்பத்தி தொடங்கும்.
2 அணு உலைகளில் இருந்தும் மொத்தம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழ் நாட்டுக்கும், 266 மெகாவாட் மின்சாரம் கேரளாவுக்கும், 442 மெகாவாட் மின்சாரம் கர்நாடக மாநிலத்துக்கும், 67 மெகாவாட் மின்சாரம் புதுச்சேரி மாநிலத்துக்கும் வழங்கப்படும்.
தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம்
தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு ஒத்துக்கொண்டு உள்ளது. மீதம் உள்ள மின்சாரம் எதற்காவும் ஒதுக்கப்படவில்லை.
சோதனைகள்...
அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கூடங்குளம் 1-வது அணு உலையில் 2-வது முறையாக வெப்பப்படுத்தலுக்கும், அனைத்து வகையிலும் முழுஅளவிலான சோதனை நடத்தவும் ஜனவரி மாதம் 24-ந் தேதி ஒப்புதல் அளித்தது.
அதன்படி இந்திய அணுமின் சக்தி கழக பொறியாளர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக அங்கு தங்கி இருந்து, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய குழுவினர் முன்னிலையில் இந்த சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள அனைத்து அணுமின் நிலையங்களும், நில நடுக்கம், சுனாமி, கடல் புயல், ராட்சத அலைகளின் சீற்றம், வெள்ளம், கடலில் திடீரென தண்ணீர் உள்வாங்குதல், கரைக்கு ஏறுதல் ஆகிய காரணங்களால் ஏற்படும் எந்த விளைவுகளாலும் பாதிக்கப்படாத வண்ணம் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேலும், கடற்கரையில் கட்டப்பட்டு உள்ள நீர் அலை தாங்கிகள், தடுப்பு சுவர்கள், தடுப்பு கரைகள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள், மேற்கூறிய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து விடும். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொரு கால கட்டத்திலும் முறையாக ஆய்வு செய்யவும், தேவைக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்தவும் வழிவகைகள் செய்யப்பட்டு உள்ளன," என்றார்.












Click it and Unblock the Notifications