தண்ணீர் பஞ்சம்: தினமும் ரூ.1 லட்சத்திற்கு தண்ணீர் வாங்கும் சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம்
சீரடி: சீரடி சாய்பாபா கோவிலில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் கோவில் நிர்வாகம் தினமும் ரூ.1 லட்சத்திற்கு தண்ணீர் வாங்குகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலகப் புகழ்பெற்ற சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான நீர்த் தேக்க தொட்டிகள் கிட்டத்தட்ட காய்ந்துவிட்டன. பருவமழை பொய்த்ததால் இந்த தொட்டிகளுக்கு நாசிக் தர்ணா அணையில் இருந்து தண்ணீர் சரிவர வருவதில்லை. இதனால் கோவிலில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோவில் நிர்வாகம் தினமும் ரூ.1 லட்சம் கொடுத்து தண்ணீர் வாங்கி வருகிறது. தற்போது தினமும் 50,000 பேர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை கோடை விடுமுறையின் போது 3 லட்சமாக அதிகரிக்கும். கோவிலுக்கு தினமும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
நீர்த் தேக்க தொட்டிகள் 332 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேகரிக்கக்கூடிய அளவு பெரியதாகும். அதில் இருந்து தண்ணீர் நீராவியாவதை தடுக்க தொட்டிகளை பிளாஸ்டிக் ஷீட்கள் போட்டு மூட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் முடிய குறைந்தது ஒரு மாத காலம் ஆகும். இதற்கிடையே கோவிலுக்கு தினமும் நாசிக் தர்ணா அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கோவில் நிர்வாகம் மகாராஷ்டிரா மாநில பாசனத்துறையை கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications