'டாஸ்மாக்கை மூடுங்க' - 13-ம் தேதி மாநில அளவில் தேமுதிக ஆர்ப்பாட்டம்! - விஜயகாந்த் அறிவிப்பு

இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆண்களை போன்று பெண்களும் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்றும், அதற்குரிய சமத்துவமும், சம வாய்ப்பும் அவர்களும் பெற வேண்டும் என்றும் கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்து இருந்தேன். ஆனால் தற்பொழுது உள்ள நிலைமையோ மேலும் மோசமாக உள்ளது.
பெண்கள் நடமாட முடியலியே...
பெண்கள் தனியாக நடமாட முடியவில்லை. அண்மையில் டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவமும், அதனால் இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளிலே எழுந்த எதிர்ப்பு அலைகளையும் நாம் பார்க்க முடிந்தது. தமிழ்நாடும் இதற்கு விதி விலக்கல்ல. தூத்துக்குடிக்கு அருகில் பள்ளிக்கூட மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நம்முடைய நெஞ்சை நெற்குருக செய்தது. இவை போதாதென்று பெண்கள் மீது ஆசிட் வீசும் வன்கொடுமைகள் வளர்ந்து வருகிறது.
மது ஈஸியா கிடைக்குதே...
மது போன்ற போதை வஸ்துகள் இன்று தாராளமாக கிடைக்கின்றன. அரசே ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளை திறந்து மது பானங்களை விற்பனை செய்யும் அவலமும் உள்ளது. இவற்றால் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
மதுவிலக்கை அமல்படுத்துங்க
போதை வஸ்துகள் எளிதில் கிடைக்கா வண்ணம் ஒழுங்குபடுத்துவதும், சட்டம் ஒழுங்கை சரியாக செயல்படுத்துவதன் மூலமும் இத்தகையோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த அரசினால் முடியும். எனவே தமிழ்நாட்டில் அரசினுடைய டாஸ்மாக் மதுபான கடைகளை மூடி விட்டு, மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
13-ம் தேதி ஆர்ப்பாட்டம்
வருகின்ற மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தை பெருமையோடு கொண்டாட வேண்டிய தருணத்தில் தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற பாலியல் வன்கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும், அரசு மதுபானக் கடைகளை மூடி விட்டு, மது விலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திட வேண்டும் என்கின்ற முழக்கத்தோடும், இதையெல்லாம் செய்ய தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தே.மு.தி.க. மகளிர் அணியின் சார்பில் தே.மு.தி.க அமைப்பு ரீதியான ஒவ்வொரு மாவட்ட அளவிலும் வருகின்ற 13-ந் தேதி (புதன்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
பிரேமலதா
அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சி தலைவர் அலுவலகம் அல்லது கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் தே.மு.தி.க. அவை தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பிரேமலதா விஜயகாந்த், மகளிர் அணி துணை செயலாளர் டி.சுபமங்களம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications