பொட்டு சுரேஷ் கொலையில் போட்டுக் கொடுக்கும் முக்கிய புள்ளிகள்

மதுரையில் கடந்த ஜனவரி 31ம் தேதி இரவு பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 14 பேர் சிக்கியுள்ளனர். எனினும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அட்டாக் பாண்டி தலைமறைவாகவே உள்ளார்.
அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவரும் நிலையில் மீண்டும் மதுரையில் உள்ள திமுக பிரமுகர்களிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர் போலீசார்.
கடந்த 4 ம் தேதி மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி, சோலைராஜா, தேனி முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் ஆகியோரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது பொட்டுவுக்கு எதிரிகள் யார் யார் என்றும், உங்களுக்கும் பொட்டுவுக்கும் எப்போது பழக்கம் என்பது உள்ளிட்ட பல கேள்விகளை கேட்டுள்ளனர்.
அப்போது தளபதி 1996ல்தான் பொட்டு சுரேஷ் திமுகவிற்கு வந்தார் அப்போதில் இருந்துதான் பழக்கம் என்று கூறியவர், மற்ற கேள்விகளுக்கு தெரியாது என்றே கூறினாராம்.
பொட்டு சுரேஷின் நண்பர்களான பால தம்புராஜ், கல்யாணியும் அன்றைய தினம் விசாரணைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு நிறைய தகவல்களை கூற தயங்கியுள்ளனர். அவரைக் கேட்டால் தெரியும், இவரைக் கேட்டால் தெரியும் என்று சிலரின் பெயரை போட்டு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் மாஜி துணை மேயர் மன்னனிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே மாஜி எம்.எல்.ஏ. மூர்த்தியிடமும் மற்றும் மன்னனிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இன்றும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்ரமணியபுரம் காவல்நிலையத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் சிறைச்சாலையில் சொகுசு
இதனிடையே பொட்டு கொலை வழக்கில் சரணடைந்த குற்றவாளிகளுக்கு சேலம் சிறைச்சாலையில் ராஜ மரியாதை கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளுக்கு கிடைத்து வரும் சொகுசான உபசாரம் பார்த்து சிறைத்துறை அதிகாரிகளே அதிர்ந்து போயுள்ளனராம்.
'சிக்ஸ் மர்டர் சூப்பர்மேன்' ஏற்பாடு
அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் சரணடைய முடிவெடுத்த உடனேயே இவர்களின் லைனுக்கு வந்த அட்டாக். சேலத்தில் சரணடைய கூறியுள்ளார். ஏனெனில் அங்குதான் சிக்ஸ் மர்டர் சூப்பர் மேன் ஆட்கள் இருக்கிறார்கள் அவர் மூலம் உதவி கிடைக்கும் என்று கூறினாராம்.
அது என்ன 'சிக்ஸ் மர்டர் சூப்பர்மேன்?
ஒரு வழக்கு தொடர்பாக சேலம் சிறையில் அட்டாக் பாண்டி இருந்தபோது 6 கொலைகளை செய்த ஒருவர் அங்கு இருந்தாராம். அவருக்கு சிக்ஸ் மர்டர் சூப்பர் மேன் என்று சிறைச்சாலையில் செல்லப் பெயர் வைத்துள்ளனர். இப்போது அவர் சிறையில் இல்லாவிட்டாலும் அவருடைய ஆட்கள் இப்போதும் இருக்கின்றனர். அவர்கள்தான் விஜயபாண்டி குரூப்பிற்கு உதவி செய்கின்றனராம்.
சுகமான சிறை
தமிழ் நாட்டிலேயே சேலம் மத்திய சிறைதான் சுகமான சிறையாம். எனவேதான் பொட்டு வழக்கில் சரணடைந்த விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் அங்கு பைவ் ஸ்டார் உபசாரத்தில் இருக்கிறார்களாம். காலையில் பெட் காபி முதல் இரவு சிக்கனோடு டின்னர் வரை சிக்ஸ் மர்டர் சூப்பர் மேன் ஆட்கள் கவனித்துக் கொள்கின்றனராம்.
பிறந்த நாள் கொண்டாட்டம்
சிறைக்கு சென்ற முதல்நாளே பொட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் தங்கள் அறைக்கு வரவழைத்து தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டனராம். அதோடு அட்டாக் சொன்ன தகவல்களையும் பரிமாறிக் கொண்டனராம்.
இந்த கொலைவழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வரவே கேக் வெட்டி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. பணமும், அதிகார பலமும் இருப்பவர்களுக்கு சிறைச்சாலை கூட ஸ்டார் ஹோட்டல்தான் என்று பேசிக்கொண்டனர் மற்ற கைதிகள்.
செல்போன் சகிதமாக விஜயபாண்டி
என்னதான் சிறையில் இருந்தாலும் செல்போன் சகிதமாகத்தான் விஜயபாண்டி உலா வருகிறானாம். இந்த தகவல் கசியவே நேற்று இவர்கள் இருந்த பகுதியில் ஜெயிலர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் சிறை அதிகாரிகள், ஊழியர்கள் ரோந்து வந்து கண்காணித்தனர். அப்போது விஜயபாண்டி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். சிறை அதிகாரிகளை பார்த்த அவர் செல்போனை மறைத்து வைத்து விட்டார்.
இதடினயடுத்து சிறை அதிகாரிகள் விஜயபாண்டியன் மறைத்து வைத்து இருந்த செல்போனையும், சிம்கார்ட், பேட்டரியை பறிமுதல் செய்தனர். பிறகு இதுபற்றி சேலம் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அட்டாக் பாண்டியுடன் தொடர்பில்
சிறையில் இருந்தாலும் அட்டாக் பாண்டியுடன் தொடர்பில்தான் இருக்கிறார் விஜயபாண்டி. அவ்வப்போது போலீசில் என்ன சொல்ல வேண்டும் என்று அட்டாக் பாண்டி கிளாஸ் எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் விஜயபாண்டி யாருடன் பேசினார் என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொலையாளிகள் சிக்குவார்களா?
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ஆரம்பித்த இடத்தில் இருந்தே மறுபடியும் போலீசார் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டால் மட்டுமே முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று கூறுகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications