கேரளாவில் அரசு பஸ் டிரைவருக்கு லாட்டரியில் ரூ.2 கோடி பரிசு
திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் அம்மாநில போக்குவரத்துக் கழக பஸ் டிரைவர் நோவி என்பவருக்கு ரூ. 2 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலம் வைக்கம் கண்ணியங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நோவி. கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராக உள்ளார். அவரது மனைவி அம்பிகா. அவர்களுக்கு ஆரியன்(2) என்ற மகன் உள்ளான். நோவிக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. இன்று பரிசு விழும், நாளை விழும் என்று நம்பி ஆண்டுக்கணக்கில் தினமும் லாட்டரி சீட்டு வாங்கி வந்தார். ஆனால் அவருக்கு பரிசு விழுந்தபாடில்லை.
இந்நிலையில் அவர் கடந்த வாரம் பாக்கியக்குரி என்ற கேரள அரசு லாட்டரி சீட்டு வாங்கினார். ஆனால் லாட்டரி விழுந்ததா என்று தினமும் பார்க்கும் அவர் இந்த லாட்டரிக்கு மட்டும் பார்க்காமல் விட்டுவிட்டார். முதல் பரிசுக்குரிய லாட்டரி சீட்டு குறித்து கடை உரிமையாளர் விளம்பரம் செய்திருந்தார். இதைப் பார்த்த நோவியின் நண்பர்கள் அவரிடம் வந்து தெரிவித்தனர்.
அதன் பிறகு அவர் தனது லாட்டரி சீட்டை எடுத்துப் பார்த்தபோது அவர் கண்ணையே அவரால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் முதல் பரிசான ரூ. 2 கோடி அவருடைய சீட்டுக்கு தான் கிடைத்திருந்தது.
இது குறித்து நோவி கூறுகையில்,
நோயால் அவதிப்படும் என் பெற்றோரின் மருத்துவச் செலவுக்கு இந்த பரிசுத் தொகையை பயன்படுத்துவேன். நான் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வந்தபோதிலும் தற்போது தான் அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications