சூரியனைச் சுத்தி ரவுண்டு போட்டது யாருப்பா...??

மழைக்காலத்தில் வானவில் தோன்றும். ஆனால் மழை இல்லாமல் வானம் வெறிச்சோடிப் போயிருக்கும் இந்த நேரத்தில், சென்னையில் சூரியனைச் சுற்றி பெரிய வளையம் ஒன்று காணப்பட்டதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
சாலைகளில் போனவர்கள் நின்று சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட வளையத்தைப் பார்த்து பிரமித்தனர். இதுகுறித்து எஸ்.எம்.எஸ். மூலமும், செல்போன் மூலமும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து வெளியில் வந்து பாருங்கப்பா வேடிக்கையை என்று உஷார்படுத்தினர்.
சூரியனைச் சுற்றிக் காணப்பட்ட இந்த வளையத்தின் உட்பகுதி சிவப்பு நிறத்தில் இருந்தது. வெளிப்பகுதி நீல நிறமாக இருந்தது. சில நிமிடங்கள்தான் இந்த வான வேடிக்கை, அப்புறம் மறைந்து விட்டது.
ஏன் இப்படி...?
இதுகுறித்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தின் அறிவியல் அதிகாரியான சவுந்திரராஜன் கூறுகையில், இது வழக்கமாக வானில் நிகழக்கூடியதுதான். அதிக உயரத்தில் மேகம் திரளும் போது அதில் உள்ள பனிச் சிதறல்களில் ஒளிபட்டு ஒளி விலகல் ஏற்படும். பனிச் சிதறல்கள் அறுகோண வடிவில் இருப்பதால் அதில் ஒளி பட்டு சிதறும் போது வட்ட வடிவில் தோன்றும்.
அதிகமாக நீல நிறம் விலகல் அடையும். அதாவது 22.3 டிகிரி வரை விலகும். குறைவாக விலகல் அடைவது சிவப்பு நிறம். அதாவது 21.5 டிகிரி விலகல் அடையும்.
இதனால் உட்புறம் சிவப்பு நிறத்திலும், வெளிப்புறம் நீல நிறத்திலும் ஒளிவட்டம் தெரியும். இந்த மாதிரி ஒளி விலகல் அடிக்கடி ஏற்படுவதுண்டு என்றார்.












Click it and Unblock the Notifications