தந்தைக்கு ஜீவனாம்சம் தராத 6 பிள்ளைகள்... வீட்டு சாமான்களை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு
வேலூர்: தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்காத 6 மகன்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த வேலூர் மாவட்டம் வாலாஜா கோர்ட், அவர்களது வீடுகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய அதிரடி உத்தரவிட்டது.
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம் திருப்பாற்கடல் அண்ணா வீதியைச் சேர்ந்தவர் வி.ராமகிருஷ்ணன். இவரது 6 மகன்களான அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் ஆகியோர் இப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர், இவர்களுக்கு ராமகிருஷ்ணன் தனது சொத்துகளை பாகப் பிரிவினை செய்துகொடுத்துள்ளார்.
சொத்து கைக்கு வரும் வரை தந்தையை பத்திரமாக காத்து வந்த 6 பிள்ளைகளும், சொத்துக்கள் கைக்கு வந்ததும், தந்தையை நட்டாற்றி விட்டு விட்டனர். சரியாக சாப்பாடு கூட போடுவதில்லையாம். இதைத் தொடர்ந்து, மகன்களிடம் ஜீவனாம்சம் கோரி வாலாஜா குற்றவியல் நீதிமன்றம் 1-ல் ராமகிருஷ்ணன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், மாதம்தோறும் 6 மகன்களும் தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என 2012ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி உத்தரவிட்டார் ஆனால் அவர்கள் சொன்னபடி வழங்கவில்லை. இதையடுத்து ராமகிருஷ்ணன் அப்பீல் செய்தார்.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட் காயத்ரி, 6 பேரின் வீடுகளில் உள்ள மின்விசிறி, கட்டில், பீரோ, பித்தளை சாமான்கள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்து மார்ச் 22ஆம் தேதிக்குள் ராமகிருஷ்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என காவேரிப்பாக்கம் போலீஸாருக்கு அதிரடி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications