ஈழத் தமிழருக்காக 8 மாணவர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்!

கோரிக்கைகள் என்ன?
இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப் படுத்த வேண்டும் , இலங்கையின் மீது பொருளாதாரத் தடை கொண்டுவர இந்தியா ஒத்துழைக்க வேண்டும் , உலகத் தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு வெளியுறவுத் துறை அமைக்க வேண்டும் ,தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் நேற்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
திலீபன், ஸ்டாலின்
இப்போராட்டத்தில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் திலீபன், பி.ஏ. கணிதம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஜோப் லியோ ஸ்டாலின், பிரிட்டோ, அந்தோணி சாஜ், பால் கென்னத், பி.ஏ. தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் பார்வைதாசன், பி.ஏ. சமூக அறிவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் மணி, பி.ஏ. வணிகவியல் இரண்டாம் ஆண்டு மாணவர் சண்முகப் பிரியன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
லயோலா கல்லூரிக்குள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தை மாணவர்கள் தொடங்கியதால் நுங்கம்பாக்கம் பகுதியில் போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர். அப்பகுதியிலேயே இலங்கை தூதரகமும் இருப்பதால் அது தாக்குதலுக்குள்ளாகக் கூடும் என்ற சூழ்நிலையும் நிலவியது. இதனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றனர்.
கோயம்பேட்டில்..
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்துக்கு இடம் மாறினர். மாணவர்கள் தற்போது உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு ஈழத் தமிழருக்காக தீக்குளித்த செங்கொடியின் நினைவாக "செங்கொடி திடல்" என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த இடத்தில தற்போது பல தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் பெரும் திரளாக வந்து மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் . மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications