காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்திற்கு சாதகமாக நடந்து கொண்ட கருணாநிதி... ஜெ. குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், தமிழக விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற மனம் கருணாநிதியிடம் இல்லை" என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவேரி பாசன விவசாயிகள் சார்பில் தஞ்சாவூரில் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்து, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டியதற்காக எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்; இதை தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே; தமிழக விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைப் பிரச்சனையாக விளங்கி வரும் பல்வேறு நதிநீர் பிரச்சனைகளில் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மிக முக்கியமானதாகும். சென்னை மாகாணத்திற்கும், மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே 1892 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், காவேரியில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் கருணாநிதி. மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஆனால், இந்த இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட எவ்வித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை.
ஆனால், இந்த இறுதி ஆணை வழங்கப்பட்டது முதல் இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும்; தமிழகத்திற்கு பாதகமாக உள்ள ஒரு சில அம்சங்களை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
என்னைப் பொறுத்த வரையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட வேண்டும்; காவேரி நீரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற மனம் என்னிடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் என்னுடைய ரத்தத்தில் ஊறிய ஒன்று. இதனால் தான், சுயநலமின்றி, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நான் செயல்பட்டேன். அதில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாரதப் பிரதமரை நான் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது மத்திய அரசின் கடமை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. எனவே, சட்டப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
இல்லையெனில், உங்களின் ஆதரவுடன் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வேன். காவிரியில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டி, தமிழகத்திற்குரிய பங்கினை பெற்றுத் தருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்."இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
கருணாநிதிக்கு நன்றி சொன்ன ஜெ.
காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடன் 20.2.2013 அன்று நான் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தேன். இது நமக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றேன். தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை, எதிர்க்கட்சி நண்பர்கள், நடுநிலையாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மனமுவந்து பாராட்டினர்.
ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதியோ, "வென்றவர் சொல்வதெல்லாம் வேதம் ஆகுமா?" என்ற தலைப்பிலே ஓர் அறிக்கையை விடுத்தார். அந்த அறிக்கையிலே பல உண்மைக்கு புறம்பான செய்திகளை சொல்லியிருந்தாலும்; இந்தப் பிரச்சனையில் நான் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பதை அவர் தன்னையும் அறியாமல் "தலைப்பின்" மூலம் ஒப்புக் கொண்டிருக்கிறார். "வென்றவர்" என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறார் அல்லவா? அதற்கு என் நன்றியினை நான் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications