ஸ்ரீநகர் விமான நிலையத்தில் யாசின் மாலிக் கைது- வீட்டுக் காவல்!
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் சென்றுவிட்டு நாடு திரும்பிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு யாசின் மாலிக் சென்றிருந்த போது இந்தியாவில் பார்லிமென்ட் தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இதைக் கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் யாசின் மாலிக் போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்தில் மும்பை தாக்குதல் வழக்கின் மூளையாக குற்றம்சாட்டப்படுகிற லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தும் கலந்து கொண்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை முடக்கவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் யாசின் மாலிக் நேற்று டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர் அங்கிருந்து ஸ்ரீநகர் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரி கடந்த ஒரு மாத காலமாக ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிவினை வாதம் கோரும் இயக்கத் தலைவர்கள் கிலானி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications