பாஜகவில் அத்வானியின் முக்கியத்துவம் குறைப்பு: முக்கிய குழுவிலிருந்து நீக்க திட்டம்?

பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் இருந்தவர் அத்வானி. கடந்த இரு மக்களவைத் தேர்தல்களை அவரை பிரதமராக முன் நிறுத்தித் தான் பாஜக போட்டியிட்டது. ஆனால், பெரும் தோல்வி அடைந்தது.
இந் நிலையில், இப்போது கட்சியில் அத்வானியின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அந்த இடத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிடித்துவிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் அளவுக்கு அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கட்சியின் கொள்கை வழிகாட்டியாக உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதரவும் நரேந்திர மோடிக்குத்தான் உள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார குழுவில் அத்வானிக்கு இடம் அளிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தெரிவிக்கின்றன.
இனி நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களாக உள்ள சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் மட்டுமே உயர் அதிகார குழுவில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஏற்பாடு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நரேந்திர மோடியுடன் சமீபத்தில் விவாதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந் நிலையில் கட்சியில் அத்வானி ஓரங்கட்டப்பட்டு வருவதையே அவருடைய சமீபத்திய நடவடிக்கைகளும் காட்டுகின்றன. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதில் பாஜக தோல்வி அடைந்து விட்டதாகவும், கட்சி வளரவே இல்லை என்றும் அத்வானி சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
காங்கிரசைப் போல், பாஜகவையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கி விட்டனர் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அத்வானியின் விரக்தி நிலையை இந்த கருத்துகள் பிரதிபலிப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இதை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். கொல்கத்தாவில் நிருபர்ரளிடம் பேசிய அவர், கட்சியில் அத்வானிக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக வெளியான தகவல் கற்பனையானது, தவறானது. அவர் எங்களது மூத்த தலைவர் என்றார்.












Click it and Unblock the Notifications