இந்திய ஜனநாயக கட்சியில் அடைக்கலம் புகுந்த லாட்டரி மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்!

கடந்த திமுக ஆட்சியில் ஆட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தார் மார்ட்டின். படத் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். அதன் பின்னர் ஆட்சி மாறி அதிமுக பதவிக்கு வந்ததும் மார்ட்டின் மீது பல்வேறு வழக்குகள் சரமாரியாக பாய்ந்தன.
அடுத்தடுத்து ஒவ்வொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்புச் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. கோர்ட்டுக்கும், சிறைக்கும் அலைக்கழிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மார்ட்டினை விடுவிக்க தன்னிடம் அதிமுகவினரும் போலீசாரும் கோடிக்கணக்கில் பேரம் பேசுவதாகவும், இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளதாகவும் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் புகார் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மார்ட்டினை விடுவிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று மிரட்டி ஆளும் கட்சியின் பெயரைச் சொல்லியும் போலீஸ் உயர் அதிகாரிகள் பெயரைச் சொல்லியும் பலரும் தன்னிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்து வருவதாக மார்ட்டினின் மனைவி லீமா புகார் கூறியிருந்தார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின் முன்னாள் உதவியாளர் தங்களிடம் ரூ. 2 கோடி கேட்டு மிரட்டுவதாகவும் லீமா ரோஸ் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக போலீசிலும் புகார் தந்துள்ளார், அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் திடீரென பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சியில் போய்ச் சேர்ந்துள்ளார் லீமா ரோஸ். அரசியல் ரீதியான பாதுகாப்பு கருதி அவர் பாரிவேந்தரிடம் போய்ச் சேர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.
ஆனால் இந்திய ஜனநாயகக் கட்சி அவருக்கு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications