இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாம்: இது நம்ம ஞானதேசிகன் 'புருடா'!
சென்னை: இலங்கை விவகாரம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் மாணவர்கள் யாரும் போராட வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது சம்பந்தமாக தொடர்ந்து பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், சில கட்சி நண்பர்களும் பார்க்கச் சென்ற போது அருகில் இருந்த சிலர் கற்களை எறிந்தும், தண்ணீர் பாட்டில்களை வீசியும் உள்ளார்கள். அதனால் தாமோதரன் காயம் பட்டிருக்கிறார். காவல்துறை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும், தமிழர்களின் நலன்காக்க உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் உள்ள மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் விடுத்த மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அவர்களை காவலில் வைத்திருந்தனர். இலங்கை அரசோடு பேசி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் நேரிடையாக முறையிட்டேன். 16 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கும் மற்ற ஐந்து பேரையும் விடுவிக்கின்ற முயற்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications