மஸ்கட்டில் இந்திய பள்ளி மாணவன் கடத்தல்: கை, கால் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கண்டுபிடிப்பு
மஸ்கட்: மஸ்கட்டில் கடத்தப்பட்ட இந்திய சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மஸ்கட் தார்சீட்டில் உள்ள இந்திய பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் நோயல் சாம் ஆபிரகாம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு நோயல் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வாதி கபீரில் உள்ள லூலூ சூப்பபர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு நோயல் காரில் உட்கார்ந்து பாடம் படிக்க அவரது பெற்றோரும், தம்பியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றனர்.
இரவு 11 மணி அளவில் அவர்கள் திரும்பி வந்தபோது காரில் நோயல் இல்லை. அவரது சட்டையில் இருந்து கிழிக்கப்பட்ட பாகமும், புத்தக கிழிசல்களும் கிடந்தன. இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லூலூ சூப்பர் மார்க்கெட் பின்புறம் நோயல் கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நோயல் கிடந்த இடத்தில் அவரைச் சுற்றியும் பெரிய கற்கள் இருந்தன. மேலும் அவர் மீது ஒரு பெரிய கல் இருந்துள்ளது.
நோயலின் தந்தை ஆபிரகாம் சாமுயல் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிகிறார். இது குறித்து அவர் கூறுகையில், நோயல் கிடைத்ததில் எங்களுக்கு பெருமகிழ்ச்சி. ஆனால் அவனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் போலீசார் எங்களை அவனுடன் பேச அனுமதிக்கவில்லை என்றார்.
தன்னை 3 பேர் கடத்தியதாகவும், அதில் ஒருவரின் முகம் மட்டும் ஞாபகம் இருப்பதாகவும் நோயல் தெரிவித்துள்ளார். கடத்தல்காரர்கள் தங்கள் முகத்தை பெரும்பாலும் துணியால் மறைத்துள்ளனர். நோயலின் உடம்பில் பூச்சிகள் கடித்ததால் ஏற்பட்ட வீக்கமும், மேலும் காயமும் இருந்தது.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை 12 வயது இந்திய மாணவி 2 பேரால் கடத்தப்பட்டார். அவர் எப்படியோ தப்பித்து வந்து தன்னை கடத்தியவர்களை போலீசாருக்கு அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர். ஆனால் நோயலை கடத்திய வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications