பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்: மத்திய அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு!

கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பிறகு கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடைமுறையில் உள்ள சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான புதிய மசோதாவும் தயாரித்துள்ளது. இந்த மசோதா நேற்று நடந்த மத்திய அமைச்சர்கள் சபை சிறப்பு கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இளம் குற்றவாளிகளின் வயதை 18ல் இருந்து 16க குறைக்க சில அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சகமும் இதற்கு எதிரிப்பு தெரிவித்தது. மசோதாவில் கற்பழிப்பு என்ற வார்த்தை இருந்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதையடுத்து நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த மசோதா பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த குழுவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத், சட்ட அமைச்சர் அஷ்வனி குமார், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, தொலை தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இந்நிலையில் புதிய மசோதா குறித்து ஒருமித்த கருத்து எட்டும் வகையில் வரும் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications