டெல்லி ஏர்போர்ட்டில் 37 கிலோ தங்க நகைகளுடன் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக தூதரக மூத்த அதிகாரி
டெல்லி: சிங்கப்பூரில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள 37 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த ஐக்கிய அரபு அமீரக தூதரக மூத்த அதிகாரி விமான நிலையத்தில் சிக்கினார்.
ஐக்கிய அரபு அமீரக தூதரக மூத்த அதிகாரி ஒருவர் தங்க நகைகள் கடத்தி வருவதாக டெல்லி வருவாய் புலனாய்வு இயக்குனரகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றனர். நேற்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து டெல்லிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஐக்கிய அரபு அமீரக தூதரக மூத்த அதிகாரி ஒருவரின் உடைமைகளை சோதனையிட விரும்புவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் சோதனைக்கு மறுத்த அந்த அதிகாரி பிறகு ஒப்புக் கொண்டார். அவரது உடைமைகளை சோதனையிட்டதில் அதில் 37 கிலோ தங்க நகைகள் இருந்தது.
இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
அந்த அதிகாரி தனது சூட்கேஸில் தங்க நகைகள் வைத்திருந்தார். எதற்காக இவ்வளவு நகைகளை வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. தேவையான சில நடைமுறைகளை முடித்த பிறகு அவர் விமான நிலையத்தில் இருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார் என்றார்.
அந்த அதிகாரியுடன் விமானத்தில் பயணம் செய்த டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த தொழில் அதிபர் அதிகாரியுடன் சேர்ந்து நகையை கடத்த திட்டமிட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளது.
வியன்னா தீர்மானத்தின்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். வியன்னா தீர்மானத்தின்படி தூதரக அதிகாரிகளுக்கு கிரிமினல், சிவில் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பு உண்டு. ஆனால் அவர்கள் பணியாற்றும் நாட்டின் வேண்டுகோளின்படி தூதரக அதிகாரிகள் மீது நாடு கடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications