தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்: கலைக்கல்லூரி மாணவர்கள் ஆதரவு
சென்னை: ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3வது நாளாக நடந்து வருகிறது.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் கடந்த 11ம் தேதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர். அவர்களின் போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள் சோர்வாக காணப்படுகின்றனர். அவர்கள் குறைந்த அளவே தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருகிறது என்று அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர்களுடன் சேர்ந்து யுவராஜ், பீம்ராஜ் ஆகிய மாணவர்கள் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இது தவிர கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும், கலைக் கல்லூரி மாணவர்களும் மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரதம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. சட்டக்கல்லூரி மாணவர் அலாவுதீன், ராஜாகுரு, பாண்டியன் மற்றும் கலைக்கல்லூரி மாணவர் சீனிவாசன் தலைமையில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மேலும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். திருச்சி உருமு கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் சண்முகநாதன், முருகேசன், கார்த்திக், சக்திவேல், சுரேஷ், ராகுல்சன், சசிசேகர் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் இன்று தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதே போன்று புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3வது நாளை அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications