மன்மோகன் எங்கே, ஷிண்டே எங்கே, இப்பவே வந்தாகணும்: லோக்சபாவில் பாஜக அமளி

இன்று லோக்சபா கூடியதும் நேற்று ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியான 5 ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் எழுந்து இந்த விவகாரம் குறித்து அவைக்கு வராத உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அறிக்கை விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில்,
ஒவ்வொரு முறையும் தீவிரவாத தாக்குதல் நடக்கும்போதும் அதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு நம் கடமை முடிந்துவிட்டதா? அவர்கள் இங்கு வந்து நம் வீரர்களின் தலையை துண்டித்துவிட்டு செல்கின்றனர், விளையாட்டு வீரர்கள் போன்று வந்து தாக்குதல் நடத்துகின்றனர். இது இன்னும் எத்தனை காலம் தொடரும் என்றார்.
இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கும், ஷிண்டேவும் உடனே அவைக்கு வர வேண்டும் என்று கூறியும், தீவிரவாத தாக்குதலை கண்டித்தும் பாஜக உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து கோஷமிட்டனர். ஷிண்டே மதியம் வந்து அறிக்கை விடுவார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத் உறுதியளித்த பிறகே அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.
பாஜக அமளிக்கு பிறகு மதிய வேளையில் அவைக்கு வந்த ஷிண்டே தீவிரவாத தாக்குதல் குறித்து அறிக்கை வாசித்தார். ஸ்ரீநகர் தாக்குதலில் பாகிஸ்தானின் சதி உள்ளதாக அவர் தெரிவித்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் வைத்திருந்த ஆயின்மென்ட் கராச்சியில் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும் அந்த தீவிரவாதிகளிடம் இருந்த டைரியில் உருது மொழியில் எழுதப்பட்டுள்ளது என்றார்.
இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் பொறுப்பேற்றிருந்தாலும் அது உண்மையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த அவர் தான் வாசித்த ஒரு பாராவையே மீண்டும் வாசித்தார். இதை கண்டுபிடித்த பாஜவினர் கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications