61 ஜோடியுடன் உட்கார்ந்து எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசை: மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே. சேகர்பாபு வரவேற்று பேசினார். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
61 ஜோடிகளுக்கும் மு.க.ஸ்டாலின் தங்கத் தாலியை எடுத்துக் கொடுத்தார். மணமகன் ஒவ்வொருவராக வந்து தாலியை பெற்றுக் கொண்டனர். பின்னர் கெட்டிமேளம் முழங்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினார்கள்.
மணமக்களை மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியபோது, ''இங்கு சீர்திருத்த
முறையில் நடைபெறும் இந்த சுயமரியாதை திருமணங்களை எண்ணி பெருமைப்படுகிறேன். மணமக்கள் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வேண்டும். 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும். 16 என்றால் 16 பிள்ளைகள் என்று எண்ணி விடாதீர்கள். முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் 16 செல்வங்களை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு 61 ஜோடியுடன் நான் 62-வது ஜோடியாக உட்கார்ந்து திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் மார்ச் 1-ந்தேதியே என் தந்தை எனது திருமணத்தை நடத்தி வைத்தார். என் தந்தை முன்னிலையில் மனைவிக்கு தாலி கட்டினேன்.
இன்று நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்நாளில் ஏற்பட்ட பெரிய மகிழ்ச்சியாக இதை கருதுகிறேன். இது மறக்க முடியாத ஒன்று.
இந்த நிகழ்ச்சிக்கு பி.கே. சேகர்பாபு யாரும் செய்ய முடியாத வகையில் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளார். அவரை நான் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன். மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications