கள்ளக்காதல் விவகாரம் பெண் எஸ்ஐ தற்கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் கைது
நெல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட தகாத உறவினால் சேலம் மாவட்டத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் ஜெயபிரபா. இவர் தனது கணவர் அழகேசனை விவாகரத்து செய்து விட்டு மகன் ஹரிசுடன் அய்யந்திருமாளிகை மகேந்திரபுரி தனியார் குடியிருப்பில் ஹரிசுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரையுடன் எஸ்ஐ ஜெயபிரபாவிற்கு தொடர்பு ஏற்பட்டது. ஜெயபிரபா அவருடன் குடும்பம் நடத்தினார். ராஜதுரைக்கு ஏற்கனவே திருமணமாக இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் ராஜதுரை திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ராஜதுரை சேலம் வந்தார். அவர் ஜெயபிரபாவுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் ஜெயபிரபாவின் தாய் கல்யாணி, அண்ணன் ஜெயபிரகாஷ் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை ஜெயபிரபாவை அடித்து உதைத்துள்ளார். இதனால் வேதனையடைந்த ஜெயப்பிரபா வீட்டுக்குள் சென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடனடியாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயபிரபாவின் அண்ணன் ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆர்டிஓ சதீஷ் விசாரணை நடத்தினார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான எந்த ஆவணமும் சமர்பிக்கப்படாததால் போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என அறிக்கை கொடுத்தார்.
கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் விசாரித்ததில் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, எஸ்ஐ ஜெயபிரபா கள்ள தொடர்பால் குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து ராஜதுரையை போலீசார் கைது செய்தனர்.