எஸ்.எம்.எஸ் பரிசு மோசடி: 8 கோடிக்கு ஆசைப்பட்டு 4 லட்சம் இழந்த வாலிபர்
சுரண்டை: 8 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறி வந்த மோசடி எஸ்.எம்.எஸ் ஐ நம்பி 4 லட்சம் இழந்து தவித்து வருகிறார் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர்.
சுரண்டை அருகே உள்ள ராமனூர் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் வேதிகா டேனியல். இவரது மகன் தேவசகாய செல்வம். இவர் பிளஸ்டூ முடித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில வேலை செய்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. பரிசு விழுந்திருப்பதாக அந்த எஸ்.எம்.எஸ் தெரிவிக்கவே அந்த நம்பருக்கு ,தேவசகாயம் தொடர்பு கொண்டார். மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பெண் இங்கிலாந்தில் உள்ள பிரபல கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், வருடம் தோறும் ஒரு நபரை தேர்வு செய்து பரிசு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு உங்களுக்கு ரூ.8 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும், நீங்கள் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தினால் உங்களுக்கு ரூ.8 கோடிய 35 லட்சம் வழங்குவதாகவும் கூறியுள்ளார் அந்தப் பெண்.
இதை நம்பிய தேவசகாயம் முதலில் சுங்கம் மற்றும் கலால் டெல்லி அலுவலகம் மூலம் ரூ.25 ஆயிரம் அனுப்பினார். பின்னர் பல தவணையாக ரூ.4 லட்சத்து 31 ஆயிரம் அனுப்பினார். ஆனால் தேவசகாயத்திற்கு 8 கோடி ரூபாய் வந்தபாடில்லை. இதுகுறித்து தேவசகாயம் அந்த பெண்ணிடம் கேட்டபோது பணம் கொடுக்கும் ஏஜென்ட் வருவதற்கு விமான கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.
இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவசகாயம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தேவசகாயத்தின் தாய் கூறும்போது ரூ.8 கோடி கிடைக்கும் என்ற ஆசையில் கடன் வாங்கி ரூ.4 லட்சம் கட்டினோம். இதற்காக வீட்டை அடமானம் வைத்துள்ளோம். கடனை எப்படி திரும்ப போகிறோமோ தெரியவில்லை என்று கண்ணீர் விட்டார்.












Click it and Unblock the Notifications