15 ஆண்டு வாடகைதாரரா... அப்போ இனி அது உங்க வீடு: பஞ்சாப் அரசின் கலக்கல் திட்டம்
சண்டிகர்: தொழிலாளர்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வீட்டு வசதி திட்டத்தை, பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்தினர், தொடர்ந்து, 15 ஆண்டுகள், ஒரே வீட்டில் வசித்தால், அந்த வீடு, அவர்களுக்கு சொந்தமாக்கப்படும்.
பஞ்சாபில், கட்டுமான தொழில், சாலைத் தொழில் உள்பட, பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு விட்டு, வேறு ஊர்களில் இடம் பெயர்ந்து வசிக்கின்றனர்.
அதேபோல், சில நகரங்களில், கணிசமான மக்கள், குடிசைப் பகுதிகளிலும் வசித்து வசிக்கின்றனர். இவர்களின் நலனுக்காக, பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தள அரசு, புதிதாக வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பு தகவல்கள் கூறுகையில், இந்த திட்டம், முதலில், மொகாலி நகரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக, 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும், இரண்டு படுக்கை அறைகள் உடையதாக இருக்கும். இந்த வீடுகளுக்கான வாடகை, மாதத்துக்கு, 1,800லிருந்து, 2,000 வரை நிர்ணயிக்கப்படும்.
ஒரே குடும்பத்தினர், ஒரே வீட்டில், தொடர்ந்து, 15 ஆண்டுகள் வசித்தால், 16வது ஆண்டிலிருந்து, அவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக்கப்படும். அதற்கு பின், வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இடையிலேயே, வீட்டை காலி செய்தால், வேறு ஒருவருக்கு அந்த வீடு ஓதுக்கப்படும். இந்த நகரைத் தொடர்ந்து, மற்ற நகரங்களிலும், படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மொகாலி நகரில், ஏராளமான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களை விட்டு, இடம் பெயர்ந்து வசிப்பதால், முதலில் இந்த நகரத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என தெரிவித்தன.












Click it and Unblock the Notifications