ஆதரவு வாபஸ் முடிவை எடுத்தவர் ஸ்டாலின்?- அதனால்தான் அழகிரிக்கு கோவமா??
சென்னை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவது மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவது, ஆதரவை வாபஸ் பெறுவது ஆகிய முக்கிய முடிவுகளை திமுக தலைவர் கருணாநிதி எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் இந்த அதிரடியான முடிவை பரிந்துரைத்தார் என்று கூறுகிறார்கள். இதன் காரணமாகவே மு.க.அழகிரி அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முன்பு பல பிரச்சினைகள் வந்தபோது காங்கிரஸையும் மத்திய அரசையும், மிரட்ட பல அதிரடி அறிவிப்புகளைச் சொன்ன கட்சிதான் திமுக. ஆனால் சொன்ன வேகத்தில் அதை திரும்பப் பெற்று புதிய சரித்திரமும் படைத்த கட்சிதான் இது. ஆனால் தற்போது அதிரடியான முடிவை திமுகஅறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திமுக இப்படியும் அதிரடி முடிவு எடுக்குமா என்று சிலரும், இதை முதலிலேயே செய்திருக்கலாமே என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆனால் எடுத்தது கருணாநிதி அல்ல
இந்தநிலையில் புதிய தகவல் ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது இந்த அதிரடி முடிவை எடுத்தவர் கருணாநிதி அல்ல, மாறாக கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின்தான் என்று கூறுகிறார்கள்.

கட்சியினரின் மன ஓட்டத்தை அறிந்து
காங்கிரஸுக்கு எதிராக கட்சியினர் திரும்பி பல காலமாயிற்று என்பதை ஆரம்பத்திலிருந்தே கட்சித் தலைமைக்குச் சொல்லி வந்தவர் ஸ்டாலின். எனவேதான் கட்சியினரின் மன ஓட்டம் அறிந்து இந்த முடிவுக்கு அவர் வந்தார் என்கிறார்கள்.

அதனால்தான் அழகிரிக்குக் கோபமா
மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு என்பதால்தான் மு.க.அழகிரிக்கு கடும் கோபம் என்று சொல்கிறார்கள். இதனால்தான் மற்ற மூன்று அமைச்சர்களும் ராஜினாமா கடிதம் கொடுக்கப் போனபோது அழகிரி போகவில்லை என்று சொல்கிறார்கள்.

அழகிரியை ஸ்டாலின் டிஸ்கஸ் செய்யவில்லை
வழக்கமாக திமுகவில் அதிரடிக்குப் பெயர் போனவர் அழகிரிதான். ஆனால் இந்த விஷயத்தில் அழகிரியே அதிர்ந்து போகும் அளவுக்கு ஸ்டாலின் அதி வேகமாக செயல்பட்டு விட்டதால் அழகிரி தரப்பு அதிர்ந்து போய் நிற்கிறதாம்.

பதவி போய் விட்டதே..
அதை விட முக்கியமாக மத்திய அமைச்சர் என்ற ஹோதாவில் இருந்து வந்தார் அழகிரி. தற்போது ஸ்டாலின் முடிவால் அழகிரியின் பதவி போய் விட்டது என்பதுதான் அழகிரி தரப்பு கடும் காட்டமாக இருப்பதற்கு முக்கியக் காரணமாம்.

சும்மா விட மாட்டார் அழகிரி
இந்த முறை அழகிரி சும்மா இருக்க மாட்டார். பெரிய பிரச்சினையில் இறங்குவார் என்று அழகிரி தரப்பில் பேசப்படுகிறது. அதைவெளிப்படுத்தும் வகையில்தான் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க தனியாக போனதோடு, நெப்போலியனையும் உடன் அழைத்துச் சென்றார் அழகிரி என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications