நமது மொழியின் முன்னோர் பறவைகளாம்!!!- ஆய்வில் தகவல்
வாஷிங்டன்: "பறவைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு வகையான ஒலிகள், மனிதர்கள் பேசும் மொழிகளை ஒத்தவை. அவற்றில் இருந்து மனித மொழி பிறந்திருக்கலாம்' என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
உலகிலேயே மிகவும் சுதந்திரமான ஜீவன் பறவைதான் என்பார்கள். அதை வைத்துத்தான் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்ற பாட்டையே பாடி வைத்தார்கள்.
அதேபோல பறவைகளைப் போல அருமையான விஷயம் இல்லை எனலாம்.இதனால்தான் பேர்ட் வாட்ச்சிங் கூட வந்தது.
அன்றே சொன்னார் டார்வின்
பரிணாமவியலின் தந்தை என, அழைக்கப்படும், சார்லஸ் டார்வின், 1871ல் எழுதிய நூலில், "பறவைகளின் பாடல்களில் இருந்து, மனிதன் பேச கற்றுக்கொண்டிருக்கலாம்' என, தெரிவித்திருந்தார்.
டார்வின் சொன்னது உண்மைதான் - ஆய்வாளர்கள்
இப்போது, அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவர் கூறியது உண்மை என, ஒப்புக்கொண்டுள்ளனர்.
சங்கேத மொழிகள்
ஆதி மனிதர்கள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள, சங்கேத மொழிகளைத்தான் பயன்படுத்தினர். அதில், இரண்டு அடுக்குகள் இருந்தன.
முதல் அடுக்கில் உணர்ச்சி.. 2வது அடுக்கில் அர்த்தம்
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முதல் அடுக்கில், வாக்கியத்தை மாற்றி அமைத்துக்கொள்ள தேவையான தகவல்கள் இருக்கும். மற்றொரு அடுக்கு, வாக்கியத்தின், மொத்த அர்த்தத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.
பறவைகளின் ஓசைகளும் இதே தன்மைதான்
பறவைகள், தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் பல்வேறு வகையான ஓசைகளும், இதே தன்மையையே கொண்டிருப்பதாக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த மொழியிலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஓசையைக் கவனித்து மொழி கற்ற மனிதன்
""ஆதிகாலத்தில், காடுகளில் வாழ்ந்த மனிதர்கள், பறவைகள் வெளிப்படுத்தும் ஓசையை கவனித்து, பேசக் கற்றுக்கொண்டிருப்பர். 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு அடுக்குகளையும் ஒன்றிணைத்து, மேம்பட்ட, மொழி வடிவை உருவாக்கினர்,'' என, மொழியியல் பேராசிரியர், ஷிகெரு மியாகவா தெரிவித்து உள்ளார்.
பறவைகள் நமக்குக் கற்றுக் கொடுத்தன.. நாம் கிளிக்கு பேசக் கற்றுக் கொடுத்து அழகு பார்க்கிறோம்.. விசித்திரம்தானே...!