ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட் நடத்தியது தவறு: ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு

இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக நேற்று முன்தினம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து திமுக அமைச்சர்கள் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு பின்னால் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று காலை ஸ்டாலினின் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது பற்றி சற்று நேரத்திற்கு முன்பு தான் எனக்கு தகவல் கிடைத்தது. நான் வழக்கமாக பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் (நாராயணசாமி என்று பின்னர் தெரியவந்தது) பேசியிருக்கிறேன். இந்த சோதனையை நான் எதிர்க்கிறேன். சிபிஐயின் இந்த செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்றார்.
தமிழகத்தில் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், இந்த ரெய்ட் திமுகவுக்கு உதவியே புரியும் என சிதம்பரம் கருதுகிறார். தமிழகத்தின் நிலவும் உண்மையான சூழலை மத்திய அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டதாகக் கருதும் ப.சிதம்பரம், தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு என ஒரு பாதுகாப்பான தொகுதி கூட இல்லாமல் போய்விட்டதாக நினைப்பதாகத் தெரிகிறது.
திமுகவுடன் இன்னும் கூட சமாதானமாகப் போகவும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கருதுகிறார்.
இதனால் தான் மத்திய அரசின் அவசர நடவடிக்கைகளை அவர் எதிர்க்கிறார். அதே நேரத்தில் மற்ற துறைகளின் நடவடிக்கை குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது வழக்கத்துக்கு மிக மாறானது.
இந்த ரெய்டே தன்னால் தான் நடத்தப்படுவதாக மக்கள் கருதும் நிலை உருவாகலாம் என்றும் சிதம்பரம் கருதுகிறார். இந்தப் பெயரை வாங்க அவர் தயாராக இல்லை. இதனால் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டே, சிபிஐ ரெய்ட் தவறு என்று சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications