இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் வருமா?.. கடுமையாக எதிர்க்கிறது பாஜக
டெல்லி: திமுக கோரிக்கைப்படி, இலங்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது தவறானது, அதை ஏற்க முடியாது என்று இலங்கைத் தமிழர்கள் பால் அக்கறை உள்ளதாக வெளியில் காட்டிக் கொள்ளும் பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை நிகழ்த்தியது போர்க்குற்றமே என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது. இந்தப் பிரச்சினை தொடர்பாகத்தான் திமுக, காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தது.
இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய அமைச்சர் கம்லநாத் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டன.
இந்த்க கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக, சமாஜ்வாடிக் கட்சி, திரினமூல் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டுக் கட்சிகள் மட்டுமே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என கருத்து தெரிவித்தன.
தனிப்பட்ட ஒரு நாட்டைக் குறி வைத்து தீர்மானம் கொண்டு வரக் கூடாது. அதை அனுமதிக்க முடியாது. அதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் உரத்த குரலில் தெரிவித்தனராம்.
இதன் காரணமாக இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் போராட்டம், நாடாளுமன்றத்தை தொடர்ந்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முடக்கி வருவது உள்ளிட்ட நெருக்கடிகளால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications