தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த திமுக: நல்லகண்ணு
நெல்லை: தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது தி.மு.க. மத்திய அரசில் இருந்து, வெளியேறியிருப்பது வேதனையையே அளித்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டம் காரணமாகவே மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது என்றும் கருத்துக் கூறியுள்ளார்.
"தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாணவர்களின் பெருந்திரள் தொடர் முழக்க போராட்டத்தை நிறைவு செய்து அவர் கூறியதாவது, ‘தமிழகம் முழுக்க புதன்கிழமை (மார்ச் 20) 1 கோடி பேரை திரட்டி காட்டுவதாக மாணவர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து அதன்படி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இப் போராட்டத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோர் பங்கேற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அளவில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
1967-ல் தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்தது மாணவர்கள்தான். தற்போது நடைபெறும் மாணவர்கள் போராட்டத்துக்கு அரசியல் நோக்கமில்லை, பொய்யில்லை.
தமிழகம் முழுக்க நடைபெறும் மாணவர் போராட்டம் மத்திய அரசிலிருந்து தி.மு.க.வை வெளியேறச் செய்திருக்கிறது. 2009-ஆம் ஆண்டிலேயே வெளியே வந்திருந்தால் இந்த அளவுக்கு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது தி.மு.க. வெளியேறியிருப்பது வேதனையையே அளிக்கிறது' என்றார் நல்லகண்ணு.
மேலும், திருநெல்வேலியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கும், போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications