நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்: பல்கலைத் தேர்வுகள் என்ன ஆகும்?
நெல்லை: இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு குறிப்பிட்ட நாளில் நடைபெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இனப்படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பத்து தினங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மையையும் எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பொதுமக்களும் பங்கேற்பு
திருத்துறைப்பூண்டி அருகே தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 20 பேர், இரண்டாவது நாளாக பட்டினிப் போராட்டத்தை தொடர்கின்றனர். குடிவாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள ஆண்டிப்பந்தல் கிராமத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரியில் ரயில் மறியல்
உதகை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 6ஆவது நாளாக பட்டினிப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட 17 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் உண்ணாவிரதம்
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 21 மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாக தொடர்கிறது. கும்பகோணத்தில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்வுகள் என்னவாகும்?
மாணவர்கள் கடந்த 15ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் விடுதிகளும் இழுத்து மூடப்பட்டன. இதனையடுத்து நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செய்முறை தேர்வுகள் ஓத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பல்கலை கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஏப் 20ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான அட்டவணையை நெல்லை பல்கலைழக தேர்வு கட்டுபாட்டுதுறை தயார் செய்து வந்தது. இந்நிலையில் அனைத்து கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டதால் செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டப்படி ஏப் 20ல் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பிற பல்கலைக்கழங்களிலும் தேர்வு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் 90 நாள் கல்லூரி வேலை நாளாக இருக்க வேண்டும். தற்போது கல்லூரி மூடப்பட்ட பின்னரும் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. எனவே இந்த வாரம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில் மேலும் கூடுதல் நாட்கள் கல்லூரி செயல்படவேண்டியுள்ளது. அப்போதுதான் செமஸ்டருக்கு உரிய பாடங்கள் முழுமையாக முடிக்க முடியும். இதன் காரணமாக வருகிற ஏப்ரல் 20ல் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் தள்ளி போவது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications