இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக்க இந்தியா தவறி விட்டது: திமுக அதிருப்தி

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இன்று நிறைவேறியது. இருப்பினும் இதை எவ்வளவு நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு நீர்த்துப் போக வைத்து விட்டன இந்தியாவும், இலங்கையும்.
இந்தத் தீர்மானத்தை வலுவாக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரி வந்தன. மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். திமுகவும் இதுதொடர்பாக மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி வந்தது.
இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்களுடன் கூடியதாக இந்த தீர்மானத்தை மாற்ற வேண்டும். இலங்கை அரசும், அதன் ராணுவமும் நடத்திய இனப்படுகொலை குறித்து அதில் இடம் பெற வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவை வலியுறுத்தி இவற்றைச் செய்ய வேண்டும் என்று திமுக கோரி வந்தது.
ஆனால் இது எதையுமே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த திருத்தங்கள் எதையும் அது மேற்கொள்ள முயலவும் இல்லை. கடைசியில் நீர்த்துப் போன நிலையிலேயே இந்தத் தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவையும் திமுக வாபஸ் பெற்றது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நீர்த்துப் போன நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திமுக அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி கூறுகையில், இந்தத் தீர்மானம் நீர்த்துப் போய் விட்டது. இதை வலுவாக்க அரசு தவறி விட்டது, தோல்வி அடைந்து விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications