டெல்லியில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் -ஒருவர் சிக்கினார்-தீவிரவாதியா?
டெல்லி: டெல்லி ஜும்மா மசூதி அருகே போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின்போது ஒரு நபர் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் சிக்கினார். அந்த நபர் தீவிரவாதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று இரவு அந்தப்பகுதியில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் சிக்கின. மேலும் பல ஏ.கே.47 துப்பாக்கிகளும் சிக்கின.
இதையடுத்து போலீஸார் ஒரு நபரைப் பிடித்தனர். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உ.பி. மாநிலம் கோரக்பூரில் சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் கொடுத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் லியாகத் ஷா. இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 15 வருடமாக ஹிஸ்புல் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் தீவிரவாதத் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளதால் தலைநகரில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications