மீனம்பாக்கம் புதிய உள்நாட்டு விமான முனையம் செயல்பட தொடங்கியது… பயணிகள் தடுமாற்றம்

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சி தேவையை சமாளிக்கக்கூடிய வகையில், 1 லட்சத்து 33 ஆயிரத்து 462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த புதிய முனையங்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியால் தொடங்கிவைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ஆண்டுக்கு 140 லட்சம் பயணிகள் கையாளும் திறன் கொண்டது. பயணிகள் எந்த வித தடையும் இன்றி விரைவாக பயணம் செய்யும் வகையில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு முனையத்தில் உள்ள வருகை பகுதிக்கு வியாழக்கிழமை மதியம் 12.50 மணிக்கு அந்தமானில் இருந்து 94 பயணிகளுடன் கோஏர் விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் தண்ணீர், குளிர்பானங்களை தந்து வரவேற்றனர்.
புதிய உள்நாட்டு முனையத்தில் வருகை பகுதி செயல்படுத்த தொடங்கினாலும் ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டும் இயக்கப்பட உள்ளது. இந்த முனையத்தில் அனைத்து விமானங்களும் வந்து செல்ல வசதிகள் ஏற்படுத்த காலதாமதம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய விமானநிலைய முனையம் அனைத்து வசதிகளுடன் இருந்தாலும், அறிவிப்பு பலகைகளோ, பாதைகள் இருக்கும் இடம் பற்றிய விளக்க பலகையோ எதுவும் இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர். கார் பார்க்கிங் பகுதிக்கு 500 மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டியுள்ளது என்பது பயணிகளின் குற்றச்சாட்டாகும்.
இரண்டாண்டுகளாக பணிகள் நடைபெற்று இரண்டு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட விமான முனையத்தின் குறைகளை நீக்கவேண்டும் என்றும் பயணிகளின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications