3வது அணி முடிவில் முலாயம் சிங்.. திமுகவை இழுக்க திட்டம்: ஹோலிக்கு பின் ஆட்சியை கவிழ்க்க முடிவு

எதிர்காலம் மூன்றாவது அணிக்குத்தான்... இந்த வார்த்தை சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த உ.பி முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் சொன்னது.
அதற்கான முஸ்தீபுகள் இப்போது அரங்கேறி வருகின்றனவோ என்று எண்ணும் வகையில் இருக்கின்றன முலாயம் சிங் யாதவ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்.
மூன்றாவது அணியில் யார் யார்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகிய பின்னர் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறது.
அதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தற்போது அதிருப்தி நிலையில் இருக்கிறார். இவர்களை மூன்றாவது அணியில் இணைக்கும் முயற்சியில் முலாயம் சிங் யாதவ் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஐ.மு கூட்டணி அரசில் இருந்து முதலில் பிரிந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனும் அவப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படும் நிலையில் மராட்டிய மாநிலத்திற்கு சென்றிருந்த முலாயம் சிங் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரையும் சந்தித்து பேசியுள்ளார்.
அதே போல இந்தக் கூட்டணிக்குள் திமுக, தெலுங்கு தேசம் கட்சிகளை இழுக்கவும் முலாயம் திட்டமிட்டுள்ளார்.
தேவகவுடாவின் விருப்பம்
இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் நிறுவனரான தேவகவுடா மூன்றாவது அணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மூன்றாவது அணி அமைக்கவேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார்.
தற்போது கர்நாடக மாநில தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும், அதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று தங்களின் பலத்தை நிரூபிக்க தயாராகி வருவதாக கூறியுள்ள குமாரசாமி, மூன்றாவது அணியில் தங்களின் மதசார்பற்ற ஜனதா தளம் மிகப்பெரிய பங்காற்றும் என்றும் கூறியுள்ளார்.
ஆளப் போவது காங்கிரஸ், பாஜாக, கிடையாது...
அடுத்த தேர்தலுக்குப் பின் இந்தியாவை ஆளப்போவது காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணியின் தலைமைதான் என்று கூறி வரும் முலாயம் சிங் ஆதரவாளர்கள் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் முலாயம் தான் என்று உறுதியாக கூறி வருகின்றனர்.
ஹோலி முடிந்த உடன் கவிழ்ப்பு
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை வட மாநிலங்களில் பிரசித்தி பெற்றது. அந்த கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் இறங்கலாமா என்று யோசிக்கிறாராம் முலாயம் சிங் யாதவ்.
எதிர்காலத்தில் என்ன நடக்கும்
இனி இந்தியாவில் தனிக் கட்சி ஆட்சி என்பது சாத்தியமில்லை. எந்த கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியாது. கூட்டணி ஆட்சிதான் சாத்தியப்படும் என்று மகாராஷ்டிராவில் பேசிய முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ் அதிரடி
இந் நிலையில் தொலைக்காட்சி ஒன்றிர்க்கு அளித்த பேட்டியில் கூட ஏற்கனவே ''மத்தியில் இனி மூன்றாவது அணிதான் ஆட்சி அமைக்கும். எதிர்காலம் மூன்றாவது அணிக்குத்தான் என்று கூறிவரும் அகிலேஷ் யாதவ் நேற்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "பெரும்பாலான ஊழல்களுக்கு காங்கிரஸ் கட்சியே காரணமாக இருப்பதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து கொடுத்து வரும் ஆதரவை வாபஸ்பெற திட்டமிட்டுள்ளோம்.
அக்டோபரில் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க சமாஜ்வாடி கட்சி தயாராக உள்ளது. மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றதும் தேர்தல் வியூகம் பற்றி விவாதிக்கப்படும். எங்களை பொறுத்தவரை அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் அது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அதிரடி பட்டாசு ஒன்றினை கொளுத்தி போட்டுள்ளார்.
ஜெயலலிதா, மாயாவதி கனவு என்னவாகும்?
இதனிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து செங்கோட்டைக்கு போகும் கனவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். அவரது கணக்கு என்னவாக இருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்களால் சரியாக கணிக்க முடியவில்லை. அதேபோல் பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் மாயாவதிக்கும் பிரதமர் ஆகும் கனவு இருக்கிறது.
எது எப்படியோ ஹோலி முடிந்த உடன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் ஜோலியை முடிக்க திட்டமிட்டுள்ளார் முலாயம் சிங் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications