தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
கோவில்பட்டி: தேவர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மெயின் ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு கிரில் கேட் போடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் கிரில் பதித்துள்ள சுவரை சுத்தியலால் உடைத்து கேட்டை கழற்றி உள்ளே புகுந்து தேவர் சிலையை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். இன்று காலை சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
சங்கரலிங்கபுரம் மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சிலை உடைப்பு தகவல் பரவியது. உடனடியாக கோவில்பட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. பழைய பஸ்நிலையம், எட்டயபுரம் ரோடு, மணியாச்சி பைபாஸ் நான்கு வழிச்சாலை, சாத்தூர் பைபாஸ் ரோடு, இளையரசனேந்தல் பைபாஸ், பசுவந்தனை ரோடு ஆகிய இடங்களில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
சிலை உடைப்பு தொடர்பாக தொடர்பாக போலீசார் 11 பேரை கைது செய்தனர். கோவில்பட்டி பகுதியில் இரண்டு நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக சுசீந்திரத்தில் இருந்து புதிய சிலை கொண்டு வரப்பட்டு சங்கரலிங்கபுரத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கியதில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சங்கரலிங்கபுரம் பகுதியில் இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எஸ்பிக்கள் விஜயேந்தி பிதாரி, ராஜேந்திரன். கோவில்பட்டி டிஎஸ்பி ராஜேந்திரன், மற்றும் கோவில்பட்டி, தூத்துக்குடி, நெல்லை போலீசார், அதிரடி படையினர் விடிய விடிய ரோந்து சுற்றி வருகின்றனர். எனினும் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications